நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களின் கிராமப்புற பகுதிகளில், 6 முதல் 16 வயதுள்ள பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் 6,229 பேரிடம் பேன்-இந்தியா (Presence Across Nation) கணக்கெடுப்பு நடத்தியது. இதில், பெரும்பாலான மாணவர்கள், ஸ்மார்ட்போன்களை படிப்பதற்கு பதிலாக பொழுதுபோக்குக்கு பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் தொடக்கக் கல்வியின் நிலை குறித்த அறிக்கையை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை (ஆக.8) வெளியிட்டார். இந்தக் கணக்கெடுப்பை நுண்ணறிவு வளர்ச்சிப் பிரிவு (Development Intelligence Unit), கிராமப்புற இந்தியா மாற்றம் (Transform Rural India) மற்றும் சம்போதி ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு (Sambodhi Research and Communications) ஆகியவை இணைந்து நடத்தின
ஸ்மார்ட்போனை இயக்குதல்
நாட்டின் கிராமப்புறங்களில் 49.3 சதவீத மாணவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர். அதில் 76.7 சதவீத மாணவர்கள் வீடியோ கேம் விளையாடுவதற்காக ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
56.6 சதவீத மாணவர்கள் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்காகவும், 47.3 சதவீதம் பேர் பாடல்கள் கேட்பதற்காகவும் பயன்படுத்துவதாக இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.
34 சதவீத மாணவர்கள் மட்டுமே கல்வி சம்பந்தமான குறிப்புகளை பதிவிறக்கம் செய்து படிப்பதற்காக பயன்படுத்துவதாகவும், 18 சதவீதம் பேர் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 6,229 பெற்றோர்களில், 6,135 பேருக்கு பள்ளி செல்லும் குழந்தைகளும், 56 பேருக்கு பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளும், 38 பேருக்கு இதுவரை பள்ளியிலேயே சேர்க்கப்படாத குழந்தைகளும் உள்ளனர்.
மாணவிகளின் பெற்றோர் 78 சதவீதம் பேரும், மாணவர்களின் பெற்றோர் 82 சதவீதம் பேரும், தங்கள் குழந்தைகளை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலும் படிக்க வைக்க வேண்டுமென விரும்புகின்றனர்.
எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த (58.32 சதவீதம்) மற்றும் ஒன்று முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் (42.1 சதவீதம்) ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. வீட்டில் கற்பதற்கான சூழல் இருக்கிறதா என்ற கேள்விக்கு, பாடப்புத்தகங்களைத் தவிர, குழந்தைகள் வாசிப்பதற்கேற்ற புத்தகங்கள் வீட்டில் இருக்கின்றன என்று 40 சதவீத பெற்றோர் தெரிவித்தனர்.
பெற்றோரின் பங்களிப்பு
ஒவ்வொரு நாளும் பள்ளியில் கற்றவை-நடப்பவை குறித்து, 40 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் உரையாடுகின்றனர்.
32 சதவீத பெற்றோர், வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே பள்ளி நிகழ்வுகள் குறித்து குழந்தைகளிடம் உரையாடுகின்றனர். 56 பேரின் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநின்றதற்கான காரணம் குறித்து அறிய முற்பட்டது இந்த கணக்கெடுப்பு.
இதற்கு காரணமாக மாணவிகளின் பெற்றோர், அவர்கள் குடும்பத்தின் வருவாய்க்கு உதவ வேண்டும் என்று 36.8 சதவீதம் பேரும், எங்கள் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று 31.6 சதவீதம் பேரும், பெண் பிள்ளைகள் வீட்டு வேலைகளையும், உடன்பிறந்தோரையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று 21.1 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்
இது குறித்து மாணவர்களின் பெற்றோர், பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வமில்லை என்பது பள்ளியில் இருந்து இடைநின்றதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 71.8 சதவீத பெற்றோர்கள் இதைத்தான் கூறினர்.
குடும்பத்திற்கு உதவுவதற்காக வருவாய் ஈட்ட வேண்டிய தேவை உள்ளது என்று 48.7 சதவீத பெற்றோர் தெரிவித்தனர். இக்கணக்கெடுப்பின் போது, தாங்கள் பள்ளியில் நடக்கும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்வதாக 84 சதவீத பெற்றோர் கூறினர்.
மேற்கண்ட இரண்டு காரணங்களும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம் குறித்த தகவல் சரியாக கிடைக்காத மற்றும் கூட்டத்தில் பங்கேற்க அதிக ஆர்வம் இல்லாத பெற்றோர்கள் கூறியவை.
தங்கள் குழந்தை கல்வி கற்க வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்புகளை காட்டுகிறது பின்வரும் பட்டியல் (சதவீதத்தில்). பெண் குழந்தைகளின் பெற்றோர் 78 சதவீதம் பேர், தங்கள் குழந்தை பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர் கல்வியை பெற வேண்டும் என விரும்புகின்றனர்.
குழந்தையின் கல்வியளவு (எதிர்பார்ப்பு)
மாணவர்கள் மாணவிகள்
மொத்தம் தொடக்க நிலை வரை 4.4 3.9 4
உயர்நிலை வரை 2.4 2.8 3
மேல்நிலை வரை 11.1 15.2 13
பட்டப்படிப்பு 49.6 50.3 50
மேல் பட்டப்படிப்பு/ பி.ஹெச்.டி 32.5 27.8 30